மயிலாடுதுறை காவிரிக்கரையில் கணவனுடன் உடன்கட்டை ஏறிய பெண்மணியை தெய்வமாக பாவித்து தீப்பாய்ந்தாள் அம்மன் என்ற பெயரில் கோயிலில் சிலைவைத்து பொதுமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். தீப்பாய்ந்தாள் அம்மன் நினைவாக ஆண்டுதோறும் மாசி மாதத்தில், தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 132-ஆம் ஆண்டாக தீமிதி திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு, காவிரி ஆற்றங்கரை நாலுகால் மண்டபத்தில் இருந்து அலகு காவடி, சக்தி கரகம் ஆகியவை ஊர்வலமாக புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியே வீதிஉலாவாக கோயிலை வந்தடைந்தன. கோயிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மாவிளக்கு தீபமிட்டு அம்மனை வழிபாடு செய்தனர். கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சி பொதுமக்களை உற்சாகப்படுத்தியது.
Be the first to comment