ஈரோடு: தமிழ்நாடு -கர்நாடகா மாநில எல்லையான குண்டல்பேட் வனப்பகுதியில் வரிசையாக 5 புலிகள் நடந்து செல்லும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தலமலை, பெஜலட்டி, தெங்குமரஹாடா, கேர்மாளம் ஆகிய வனப்பகுதியில் மனித இடையூறு இல்லாத நீர் நிலைகள் கொண்ட அடர்ந்த காட்டுப்பகுதியில் புலிகள் வசிக்கின்றன. 1455 கி.மீ பரப்பளவு கொண்ட இந்த புலிகள் காப்பகத்தில் 150 புலிகள் வாழ்வதற்கேற்ற சூழல் உள்ளதாகவும் தற்போது 95 புலிகள் வசித்து வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.இந்த நிலையில், தமிழக - கர்நாடக எல்லையான சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டல்பேட் வனப்பகுதியில் சமீபகாலமாக புலிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதற்கிடையே குண்டல்பேட் வனப்பகுதியான வீரன்புரம் பகுதியில் வைக்கப்பட்ட சிசிடிவி கேமராவில் புலிகள் நடமாடுவது தற்போது தெரிய வந்துள்ளது. 5 புலிகள் ஒரே நேரத்தில் நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளன. புலிகளின் புகலிடமாக உள்ள குண்டல்பேட் வனத்தில் எடுக்கப்பட்ட இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Be the first to comment